Contact Us

Name

Email *

Message *

Tuesday 15 October 2013

வடமொழியில் பெரியபுராணம்

"பரமாசாரியர் உங்களை உடனே காஞ்சிபுரம் வரச் சொல்லுகிறார்கள். கல்வெட்டு விஷயம். உடனே வரவும்" என்று காஞ்சி மடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. காஞ்சிப் பெரியவருக்கு கல்வெட்டின் மீது அளவிலாத ஈடுபாடு. ஆதாரமான செய்திகளை அவை எடுத்துக் கூறுவதால்! புரியாத கல்வெட்டுச் சொல்தொடர்களுக்கு புரியும் வகையில் எனக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியிருக்கிறார்கள். கல்வெட்டைப் பற்றி பெரியவர் கூப்பிடுகிறார் என்றால் புதிய செய்திகள் நிச்சயம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். காஞ்சிபுரத்துக்கு உடனே சென்றேன்.

பரமாசாரியரின் குறிப்பு

"ஏகாம்பரநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. 50 வருஷங்களுக்கு முன் நான் படித்த ஞாபகம். நீ போய் அதைப்படி எடுத்துக் கொண்டு வா" என்றார். அதைப் படி எடுக்கச் சென்றேன். அவ்வாறு படி எடுத்துக்கொண்டிருக்கும் போது அதற்கு மேலே சுவரில் ஒரு சம்ஸ்க்ருத கல்வெட்டு பெரிய பெரிய எழுத்துக்களில் இருந்தது. அந்தக் கல்வெட்டின் நடுவில் அப்பர் பெருமானின் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டித் தமிழிலும் கிரந்தத்திலும் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

கல்வெட்டு

திருவேகம்பமுடைய நாயனார் அறுபத்துமூவர் புராணம் சமஸ்கிருத பாஷையில் செய்த சிவபக்த விலாஸத்தை உகந்து செவிசாய்த்து அருளுகையில் இக்கோயில் தானத்தாரும் மாஹேஸ்வரரும் சந்தோஷித்து ஸ்தலத்துக்கு கர்த்தரான போகய்யதேவ மகாராச

என்று எழுதியுள்ளது. எனக்கு ஓரே மகிழ்ச்சி. பெரியவரிடம் ஓடிவந்து அந்த கல்வெட்டைப் பற்றிக் கூறினேன். சிரித்துக் கொண்டே ஆசாரிய சுவாமிகள் "சிவபக்தவிலாசம்" என்று இரண்டு நூல்கள் இருக்கு ஒன்று "உபமன்யு பக்தவிலாசம்" மற்றது "அகஸ்திய பக்தவிலாசம்" இரண்டையும் படி, புரியும் என்றார்கள். இரண்டு நூல்களும் அச்சாகியுள்ளன. உபமன்யு பக்தவிலாசம் உ.வே.சாமிநாதய்யர் நூல்நிலையத்தில் இருந்தது. அகஸ்திய பக்தவிலாசம் என்ற நூலை பாண்டிச்சேரி பிரஞ்சு இந்திய நிறுவனம் அனுப்பி உதவினார்கள். இரண்டையும் படித்தபோது நான் வியந்தேன்.

முதலில் அந்த கல்வெட்டைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கல்வெட்டு காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நடராஜர் ஆலயத்தில் கிழக்கு சுவரில் உள்ளது. கல்வெட்டின் காலம் திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனுக்கு அடுத்து ஆண்ட அச்சுதராயன் காலத்தது. கி.பி. 1532ம் ஆண்டு ஸ்ரீநிவாஸகவி என்பவர் இந்த "சிவபக்த விலாசம்" என்ற நூலை இயற்றியிருக்கிறார். அதற்காக அரசன் அவரைப் பாராட்டி மனையும் நிலமும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் கொடுத்து சிறப்பித்திருக்கிறான். இக் கல்வெட்டு சம்ஸ்கிருதத்தில் உள்ளது. அந்த ஸ்ரீநிவாஸகவியே இந்தக் கல்வெட்டை கவனம் செய்திருக்கலாம். இதனடியில் இந்த சிவபக்த விலாசம் என்ற நூல் தமிழில் உள்ள அறுபத்துமூவர் புராணத்தின் சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு என்ற செய்தி அடிக்கோடிட்டு அறிந்துகொள்ள வேண்டிய இன்றியமையாததாகும்.

சம்ஸ்கிருதத்தில் அறுபத்துமூவர்

அகஸ்தியரின் பெயரால் சம்ஸ்கிருதத்தில் அறுபத்து மூவர் புராணம் ஒன்று உள்ளது. அது ஸ்கந்த உபபுராணத்தைச் சேர்ந்தது என்று குறிப்பு உள்ளது. பக்தமாகாத்மியம் என்றும் பக்தவிலாஸம் என்றும் நூலில் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மூல நூலில் சிவபக்த விலாஸம் என்ற பெயரில்லை. மேலும் இதை இயற்றியவர் ஹரசர்மன் என்று காணப்படுவதாலும் இது அறுபத்துமூவர் புராணத்தை சம்ஸ்க்ருத மொழியில் கூறுகிறதே ஒழிய மொழிபெயர்ப்பு இல்லை. ஆதலாலும் கல்வெட்டுக் கூறும் சிவபக்த விலாஸம் இதுவல்ல என்று முதலிலேயே கூறிவிடலாம். அறுபத்துமூவர் வரலாற்றைத் தொகுத்து முதன் முதலில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் "திருத்தொண்டர் தொகை" என்று பாடியுள்ளார். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி "திருத்தொண்டர் திருவந்தாதி" என்று இதைச் சற்று விரித்துள்ளார். 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் அநபாயன் என்று பெயர் பெற்ற குலோத்துங்க சோழனின் அமைச்சர் சேக்கிழார் பெருமான் இதை ஒரு வியத்தகும் காப்பியமாக தமிழில் படைத்துள்ளார் என்பது தமிழறிந்த உண்மை.

சிவபக்த விலாஸம்

உபமன்யு முனிவரின் பெயரால் உள்ள "சிவபக்த விலாஸம்" என்ற நூல் வரலாற்றுச் சிறப்புடையது என்றே சொல்லலாம். சேக்கிழார் பெருமான் இயற்றியுள்ள அறுபத்துமூவர் புராணத்தையும், உபமன்யுவின் சம்ஸ்க்ருத நூலையும் அருகருகே வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தேன். உபமன்யுவின் நூல் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தின் செய்யுளுக்கு செய்யுள் மொழிபெயர்ப்பாக காணப்படுகிறது.

சர்ச்சையும் குலோத்துங்கனும்

சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்னர் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் சுவையாக நடந்துள்ளன. அக்காலத்திலேயே இவ்விரண்டு நூலுக்கும் உள்ள ஒற்றுமையை அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதில் தெளிவின்றி இருந்திருக்கிறார்கள். சேக்கிழார் தமது பெரியபுராணத் தொடக்கத்தில் "உன்னரும்சீர் உபமன்னிய முனி" இந்த வரலாற்றை ஏனைய முனிவர்களுக்கு கூறுவதாக தொடங்குவதால் சம்ஸ்க்ருதம் படித்தவர்கள் சேக்கிழாரின் நூல் உபமன்யு நூலின் மொழிபெயர்ப்பு என்றனர். தமிழ் படித்த அறிஞர்கள் இதை வன்மையாக எதிர்த்தனர். காலப்போக்கில் உபமன்யு நூலைப் படிப்பதையே விட்டுவிட்டனர். நன்கு நோக்கும்போது இருதறத்தாருமே உபமன்யு நூலை ஆழ்ந்து படிக்கவில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் "உபமன்யு பக்தவிலாஸம்" அநபாயனையும் குலோத்துங்க சோழனையும் கூறுகிறது. எடுத்துக்காட்டாக மனுநீதி சோழன் வரலாற்றைக் குறிக்கும்போது சேக்கிழார்.

மன்னுசீர் அநபாயன் வழிமுதல்
மின்னு மாமணிப்பூண் மனுவேந்தனே

என்று பாடுகிறார். அதை அப்படியே உபமன்யுபக்த விலாஸம்

அநபாயாஹ்வயோ மனுர்நாம மஹீபதி:

என்று கூறுகிறது.

அது போல் சண்டேச்வர நாயனார் புராணத்தில்

சென்னிஅபயன் குலோத்துங்க சோழன் தில்லைதிருவெல்லை
பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு என்னும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல்மரபின் முடிசூட்டும்
தன்மை நிலவுபதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தவ்வூர்

என்று சேய்ஞலூரை சேக்கிழார் பாடுகிறார். இதை அப்படியே உபமன்யு பக்தவிலாஸம் கூறுவதைக் கேளுங்கள்.

புண்டரீக புரசேஸ்ய தாம ஹைமம் சகரா ய:
சோளேந்த்ரஸ்ய குலோத்துங்க நாம்ந: தஸ்ய மஹீபதே:
வம்சாபிஷேக ஸத்கார: யை: ஏவ பரதிபத்யதே
கிராமேஷு பஞ்சஸூ ஏதேஷு ஸ்கந்த க்ராமஹ சகாஸ்தி ஸஹ

பொருள்: புண்டரீகபுரம் = தில்லை; தாம = கோயில் ஹைமம்சகார = பொன்மயமாக்கினான். அந்த குலோத்துங்க; சோழேந்திரனின் குலம் முடிசூட்டும் தன்மையுடைய ஐந்து கிராமங்களில் சேய்நல்லூர் ஒன்றாக விளங்குகிறது.

பெரியபுராணத்தின் மொழி பெயர்ப்பு

சேக்கிழாரின் செய்யுள் அப்படியே இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். குலோத்துங்க சோழன் பெயர் குறிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். சேக்கிழார் குலோத்துங்க சோழனின் அவையை அலங்கரித்தவர். பெரியபுராணத்தை அவன் அவையில் அரங்கேற்றியவர். அவர் எந்த சண்டேச்வர நாயனார் கதையில் அவனைக் கூறுகிறாரோ அதே இடத்தில் உபமன்யு நூலிலும் குலோத்துங்கனைக் கூறியுள்ளதைக் காண்கிறோம். ஆதலின் உபமன்யு சிவபக்த விலாஸம் என்பது காலத்தால் குலோத்துங்க சோழனக்கு பிற்பட்டது. சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தின் நேர் மொழிபெயர்ப்பு என்பதில் ஐயத்துக்கு இனி இடமே இருக்க முடியாது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்நூல் எப்பொழுது சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது என்பது இக் கேள்வி. இக் கேள்விக்கு காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு 1532 ஆம் ஆண்டு ஸ்ரீநிவாஸகவி என்பவரால் விஜயநகரப் பேரரசன் அச்சுததேவராயன் காலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது என்று தெளிவாகிறது. கல்வெட்டு கூறும் சிவபக்த விலாஸம் தான் உபமன்யு பக்த விலாஸம் என்னும் நூல். இதிலிருந்து மேலும் பல உண்மைகள் புலனாகின்றன.

விஜயநகரப் பேருதவி

1310 இல் மாலிக்காபூர் படையெடுப்பின் காரணமாக தமிழ் பண்பாட்டின் இருப்பிடமாகத் திகழ்ந்த கோயில்கள் சீர்கேடடைந்தன. தமிழ்நாட்டின் செல்வங்கள் சூறையாடப் பட்டன. இந்த நிலையில்தான் விஜயநகரப் பேரரசர்கள் அன்னியப் படையெடுப்பிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றினார்கள். நம் கோயில்களை அழிவிலிருந்து காப்பாற்றினார்கள். தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருந்த மரபுகளைக் கண்டறிந்து அவை மேலும் வளரச் செய்தனர். இதை பல கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. விஜயநகரப் பேரரசர்கள் தெலுங்குகன்னடப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு முதலில் தமிழ் அதிகம் தெரியாது. ஆதலால் தமிழ் மரபுகளையும் பாடல்களையும் சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மொழிபெயர்த்துப் படிக்கத் தொடங்கினர். இதன் பலனாக தமிழ் மரபுகள் பிறகுபகுதிகளில் எல்லாம் பரவின.

உதாரணமாக கிருஷ்ணதேவராயர் ஆண்டாளின் "திருப்பாவை" பற்றி தெலுங்கில் "ஆமுக்தமால்யதா" என்று நூலை எழுதினார். ஹம்பி முதலிய பகுதிகளில் ஆண்டாளுக்கும் ஆழ்வார்களுக்கும் கோயில்கள் எழுந்தன. அவ்வாறுதான் பெரியபுராணமும் பொழிபெயர்க்கப்பட்டது. இதை அரசன் பாராட்டி மான்னியம் கொடுத்துள்ளான் என்று கல்வெட்டிலிருந்து அறிகிறோம். நம் தமிழ்மொழி நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து பிறர் படிக்க வகைசெய்ய வேண்டும் என்று இப்பொழுது கூறுகிறோம். அக்காலத்தில் அதைச் செய்திருகிறார்கள் என்பது அறியதக்கது.

பெரியபுராணத்தின் திருத்தப் பதிப்பு

இதில் மற்றொரு சிறப்பும் உண்டு. சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சில பாடல்கள் அவர் எழுதியவை அல்ல என்றும் வெள்ளிப்பாட்டு என்றும் தள்ளியிருக்கிறார்கள். வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்ற பெரிய சிவஞானி ஒருவர் பிற்காலத்தில் இருந்தார். அவர் இவற்றை சேர்த்துவிட்டார் என்று அந்தப் பெரியவர் மீது குறைகூட கூறியிருக்கிறார்கள்! ஆனால் இந்த 16ஆம் நூற்றாண்டு சம்ஸ்க்கிருத மொழிபெயர்பை காணும்போது அந்தப் பாடல்கள் சேக்கிழாரே இயற்றியிருக்கிறார் என்று திட்டவட்டமாகக் கூறமுடிகிறது. சேக்கிழாரின் பெரியபுராணத்திற்கு ஒரு திருத்தமான பதிப்பு இன்னம் கொண்டுவரப்படவில்லை. அவ்வாறு கொண்டுவர வேண்டும் என்றால் அதற்கு இந்த சம்ஸ்க்கிருத உபமன்யு பக்த விலாஸம் மிகமிக இன்றியமையாதது.

இதுபோல் பல தமிழ் நூல்களின் திருத்தமான பதிப்புகளுக்கு சம்ஸ்க்கிருத நூல்கள் இன்றியமையாதவை என்று தோன்றுகிறது. சம்ஸ்க்கிருதத்தில் சிவரஹஸ்யம் என்று மற்றுமொரு நூலும் உள்ளது. அதில் ஒரு அத்தியாயத்தில் அறுபத்துமூவர் சரிதம் கூறப்பட்டுள்ளது. உபமன்யுவின் நூலில் இருந்து அதில் சில செய்யுட்கள் பெரியபுராணத்தின் பொழிபெயர்ப்புக்களாக காணப்படுகின்றன. இவை பற்றி விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது பல உண்மைகள் மேலும் வெளிப்படும் என்பது ஐயமில்லை.



நன்றி: டாக்டர். இரா. நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருள் துறை இயக்குனர் (ஓய்வு) 

No comments:

Post a Comment