Contact Us

Name

Email *

Message *

Saturday 28 December 2013

கோனேரிராஜபுரம் (திருநல்லம்)


மூலவர்: உமா மஹேஸ்வரர்
அம்பாள்: மங்களநாயகி 
ஸ்தல வ்ருக்ஷம்: பத்ராக்ஷம்
தீர்த்தம்: ப்ரம்ஹ தீர்த்தம்

கோனேரிராஜபுரம் (திருநல்லம்) திருவிடைமருதூரின் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் காவிரி தென்கரையில் உள்ள சோழ நாட்டின் தேவார பாடல்பெற்ற முப்பத்திநான்காவது ஸ்தலம். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இங்கு ஈசனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிட்டும் என கருதப்படுகிறது. 

இந்த திருக்கோவில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து இக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.  கண்டராதித்த சோழன் மற்றும் செம்பியன் மாதேவியின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. இக்கோவிலின் அன்றாட செலவுகளுக்காக ஏராளமான சொத்தை கோவிலுக்கு நன்கொடையாக செம்பியன் மஹாதேவி தந்துள்ளார்.

பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட, இங்குள்ள மிக உயரமான நடராஜரின் சிலை, உலக ப்ரசித்தி பெற்றது. இந்த சிலை உருவாகியதற்கு பின்னால் ஒரு ஸ்வாரஸ்யமான கதை உண்டு. இந்த கோவிலில் ஒரு அழகான நடராஜர் சிலையை ஸ்தாபிக்கவேண்டும் என்று செம்பியன் மாதேவியின் விருப்பம். தன் விருப்பத்தின்படி ஸ்தபதியிடம் ஒரு பஞ்சலோக சிலையை செய்ய ஆணையிட்டார்.

ராணியின் ஆணையின்படி ஸ்தபதியும் ஒரிரு சிலைகளை செய்ய அதை ராணி நிராகரித்தார். அவர்களுக்கு சிலை உயரமாகவும் உயிருள்ளதுபோல் தோற்றம் அளிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்கள். இத்தகையான சிலையை குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் செய்து முடிக்கவேண்டும், அப்படி செய்யவிட்டால் ஸ்தபதியின் தலை துண்டிக்கபடும் என்றும் கூறிவிட்டார்கள்.

கால அவகாஸம் நெருங்க நெருங்க ஸ்தபதிக்கு கவலையும் ஆதங்கமும் ஏற்பட்டது. ராணியின் ஆசையின்படி ஒரு சிலையை செய்ய தனக்கு உதவுமாறு கடவுளை வேண்டிக்கொண்டார். அவர் கொதித்துகொண்டிருக்கும் பஞ்சலோகத்தை, தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்காக தயாராக இருந்தார். இந்த சமயத்தில் அங்கு ஒரு வயதான தம்பதிகள் வந்தார்கள். அவர்கள் ஸ்தபதியிடம் குடிப்பதற்கு ஏதாவது வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

சிலையை சரியாக செய்ய முடியவில்லை என்று மன விரக்தியும் கோபமும் கொண்ட ஸ்தபதி இந்த தம்பதிகளை சரியாக கவனிக்கவில்லை. வேண்டும் என்றால் இந்த பஞ்சலோகத்தை பருகுங்கள் என்று கூற, சற்றும் யோஸிக்காமல் அவர்கள் அதை பருகிவிட்டார்கள்.

இதை கண்ட ஸ்தபதி ஆச்சரியம் அடைந்தார். கண் மூடி கண் திறப்பதற்க்குள் அந்த முதிய தம்பதி நின்றுகொண்டிருந்த இடத்திலேயே நடராஜரின் சிலையாகவும் பார்வதியின் சிலையாகவும் தோன்றினர். அப்பொழுது வேலை சரியாக நடக்கிறதா என்று காண ராஜாவும் ராணியும் அங்கு வந்தார்கள்.

சிலையை கண்டதுடன் அவர்களுக்கு ஆச்சிர்யமும் சந்தோஷமும் ஏற்பட்டது. சிலைகளில் நகங்களும் உடம்பில் உள்ள ரோமத்தையும் கண்டு அவர்கள் வியந்தன. இப்படி ஒரு அற்புதமான சிலையை எப்படி செய்ய முடிந்தது என்று ஸ்தபதியிடம் கேட்டார்கள். ஸதபதியும் நடந்ததை கூறினார்.

கதையை கேட்ட ராஜா அது அவரது கற்பனை என்று கோபம் அடைந்து தன் வாளை ஓங்கினார். சிலையின் வலது காலில் வாள் பட, வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் பீச்சியடித்தது. ராஜாவிற்கு குஷ்டரோகம் ஏற்பட்டது. தன் குற்றத்தை உணர்ந்த ராஜா ஈசனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனும் ராஜாவிடம் இந்த நோயிலிருந்து குணமடைய இங்குள்ள வைத்யநாதஸ்வாமிக்கு 42 நாட்கள் அபிஷேகமும் ப்ரார்த்தனையும் செய்யுமாறு கூறினார்.

அதன்படி செய்த ராஜாவும் குணம் அடைந்தார். இங்குள்ள வைத்யநாதஸ்வாமி சகல நோய்களையும் தீர்த்துவைப்பார் என்று பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பக்தர்கள் இந்த அற்புதமான சிலையை வெகு அருகிலிருந்து காணலாம்.

நடராஜரின் வலது பாதத்தில் சோழ மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தின் வடுவை காணலாம். இடது கையின் கீழ் பகுதியில் ஒரு மச்சத்தையும் காணலாம். வைத்யநாதஸ்வாமியின் சன்னதி வெளிப்ரஹாரத்தில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ளதுபோல் இங்கும் முத்துகுமாரஸ்வாமியின் சன்னதி வைத்யநாதஸ்வாமியின் சன்னதிக்கு நேர் எதிரே உள்ளது.

தினம்தோறும் ஆறுகால பூஜை நடைபெருகிறது. வைகாசி மாதத்தில் ப்ரம்ஹோத்சவம், கார்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி  மற்றும் கந்த ஸஷ்டி வெகு சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.

இந்த கோவிலில் நந்தி இல்லை. இத்தலத்தில் பூஜை செய்தால ஒன்றுக்கு பல மடங்காக பூஜா பலன் பெறுவர் என கூறபடுகின்றது. படிப்பில் மந்தமானவர்கள் மற்றும் ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள ஞான கூபம் என்ற கிணற்றுலிருந்து நீரை பருகினால் சிறந்த பலன் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

இருப்பிடம்: கும்பகோணம் திருநாகேஸ்வரம் கொல்லுமாங்குடி பேரளம் திருநள்ளார் பாதையில் உள்ள எஸ்.புதூர் என்ற இடத்திலிருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ளது கோனேரிராஜபுரம்.

திருநாகேஸ்வரத்திலிருந்து 16 கி.மீ மற்றும் கும்பகோணத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து ஏராளமான பேருந்துக்கள் எஸ். புதூர் வழியாக செல்கின்றன. எஸ்.புதூரிலிருந்து ஆட்டோக்கள் மூலம் கோனேரிராஜபுரம் வந்தடையலாம். ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ  தொலைவில் இத்தலம் உள்ளது. 
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் (காணொளி).
http://www.youtube.com/watch?v=QNheh2uRzcA

No comments:

Post a Comment